எண்ணங்கள்
கோழிக்குத் தூவின அரிசிகளாய்
சிதறிக்கிடக்கின்றன எனதெண்ணங்கள்.
பொறுக்கியெடுத்துக் கோர்க்க நினைத்தாலும்
பிரசவிக்கையில் மட்டுங்
காணக்கூடியதாய் - பின்
உருமாறிப் புறப்பட்டவைகளை
கோபத்தில் தெறித்த வார்த்தைகள் போல்
அள்ள முடியாதிருக்கிறது.Labels: கவிதை
விளையாட்டு
தனக்குப் பிடித்தவனென்று அவனுடன் சேர்ந்து,
வீட்டாருக்குப் பிடித்தவனென்று அமைந்ததில்
அறிந்ததவனென்று இவனுடன் சேர்ந்து,
கண்மூடித்தனமனமான ஆதரவுடனே
புழுதி பறக்க கிட்டிப்புள் நடக்கிறது.
முருகன் அடித்தது முகம்மதில் பட்டதாம்.
ஒன்றுமில்லையென முகம்மது சொன்னாலும்
அவர்களுக்குத் தெரியாதெனச் சொல்லி
இருவர் ஆதரவுகளும்..
அடித்தது கிட்டிப் புள்ளன்றித் தம்மை !!
மண்ணிறப் புழுதி செந்நிறமானது.
ஆதரவுகளுக்கு ஆதரவுகளும் சேர்ந்து கொள்ள,
சின்னவன் சித்தார்த் வந்து
அன்றைக்கு அறிந்த அகிம்சை போதிக்கையில்
பொருத்தமில்லாக் கதையென
நகையாடின குருதிவெறி வல்லூறுகள்.
புயல் போல் புழுதி சுழன்றெழும்பி மூச்சடைக்க
பதில் சொல்லிக் களைத்த முகம்மது
போதும்! என்றலறியதில் திடுக்கிட்டார்கள்
மலைத்துப் போயிருந்த தச்சன் மகனும்,
சுடலையன் மகனும், அரசன் மகனும்.
கிட்டிப்புள் நடக்கவில்லை அதற்குப் பிறகு.
விளையாட இன்னொரு இடம் தேடி
கண்ணீருடன் கை கோர்த்துப் போகிறார்கள்
இயேசுவும் முருகனும் புத்தனும் முகம்மதும்.
இன்னும் கிளம்பி நுரையீரல் நசுக்குகிறது
நிறம் மாறும் புழுதி. Labels: கவிதை