Friday, May 18, 2007

மீள் அறிமுகம்

தூரம் அதிகரிக்க
உருவங்கள் சிறுக்கின்றன
மீண்டும் அவை பெருக்க வழியுண்டா
இது நிகழத் தொடங்குகையிலேயே
எனக்குத் தெரிந்து போனது
ஆனாலும் நீயும் உணர்ந்திருக்கிறாய்
என்பது
நேற்று வரை தெரியவில்லை.

பணியும் பயணமும் விழுங்கும் மணிப்பொழுதுகள்
நம் சேர்ந்திருக்க வேண்டியவை
வாழ்க்கையை வாழ்கிறோமென்று
சொல்லிச் சொல்லியே
வாழாமல் நிற்கிறோம்

தெரியவில்லை நண்பனே,
தூரத்திலாவது
சமாந்தரக் கோடுகள் சேருமாவென்று!
ஆனாலும் பரவாயில்லை வா..
காதலென்று சொல்லி நம்மை
மீள அறிமுகஞ் செய்து கொள்வோம்..
நேரமிருக்குமா நமக்கு?

Labels: